பெங்களூரு:
திறந்து விடுங்க... தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுங்க... என்று உச்சநீதிமன்றம் போட்ட தீர்ப்பால் மீண்டும் கர்நாடகாவில் வன்முறை தலைத்தூக்க ஆரம்பித்துள்ளது.


கர்நாடக விவசாயிகள் மைசூரு, மாண்டியா, ஹீப்ளியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மைசூரு - பெங்களூரு இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.


சாலைகளை மறித்து விவசாயிகள் போராட்டத்தில் குதித்துள்ளதால் மாண்டியா - பெங்களூரு இடையேயான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. 


காவிரியில் தமிழகத்துக்கு செப்டம்பர் 21ம் தேதி முதல் 27ம் தேதி வரை 6,000 கன அடிநீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் இதை கர்நாடகா ஏற்கவில்லை.


மேலும் உச்சநீதிமன்றத்தில் திங்கட்கிழமை புதிதாக ஒரு மனுவைத் தாக்கல் செய்தது. அந்த மனுவில் 6,000 கனஅடி நீர் திறக்க வேண்டும் என்ற உத்தரவில் திருத்தம் செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டது. 


இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு பதில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. தொடர்ந்து காவிரியில் இருந்து தமிழகத்துக்கு இன்று (28ம் தேதி) முதல் 3 நாட்களுக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


உச்சநீதிமன்றம் தீர்ப்பு வெளியான சில நிமிடங்களிலேயே கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில் போராட்டங்கள் வெடித்தன. விவசாயிகள் சாலைகளை மறித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.


మరింత సమాచారం తెలుసుకోండి: