சினிமாவை நம்பியவர்களை அது கைவிடாது. சினிமாவை நம்பினார் கைவிடப் படார் என்று சீகர்  குழுமத்தின் தேசிய குறும்பட விழாவில் இயக்குநர் நடிகர்பாண்டியராஜன் பேசினார்.

 

இது பற்றிய விவரம் வருமாறு:

 

குறும்பட முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையிலும் புதிய படைப்பாளிகளை வரவேற்கும் விதத்திலும்  'சீகர் தேசிய குறும்பட விழா 2020 ' ஏற்பாடு செய்யப்பட்டு இந்த விழா அண்மையில் நடைபெற்றது .தேசிய அளவில் நடந்த இந்தப் போட்டியில் இந்தியாவின் பல்வேறு மொழிகளிலிருந்து தமிழ் , மலையாளம் ,தெலுங்கு,இந்தி, பெங்காலி போன்ற மொழிகளிலிருந்து ஏராளமான குறும்படங்கள் போட்டியில் கலந்து கொண்டன.

 

' நண்டூறுது ' என்கிற தமிழ்க் குறும் படம்  முதல் பரிசு பெற்றது. 

 

'டிக்கெட்' என்கிற இந்திக் குறும்படம் இரண்டாம் பரிசைப் பெற்றது . 

 

 'டெத் ஆஃபர்ஸ் லைஃப்' என்கிற மலையாளக்  குறும்படம் மூன்றாம் பரிசைப் பெற்றது.

 

 'காமப்பாழி ' என்கிற தமிழ்க் குறும்படம் ஜூரியின் சிறப்பு விருது பெற்றது.

 

விழாவில் சீகர் நிறுவனத்தின் தலைவர் ராஜ்குமார் பேசும்போது,

 

"சீகர் (SIEGER )என்றால் ஜெர்மனி மொழியில் வின்னர் என்று அர்த்தம்.நாங்கள் முதன் முதலில் இதை ஒரு பயிற்சி நிறுவன மாகத்தான் தொடங்கினோம். குறிப்பாக கார்ப்பரேட் நிறுவனங்களில் பயிற்சி கொடுத்தோம். இளைஞர்களுக்கு போட்டித் தேர்வுகளிலும் நேர்காணலிலும் நம்பிக்கையாக எப்படி எதிர் கொள்வது என்பது பற்றிய பயிற்சிகள் கொடுத்தோம். மாணவர்கள் மற்றும் வேலை பார்ப்பவர்களுக்கு விளையாட்டு அடிப்படையிலான திறனை வளர்த்துக் கொள்வது எப்படி என்று பயிற்சிகள் கொடுத்தோம் .அது பெரிய அளவில் வெற்றி பெற்றது .நிறைய கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆதரவு தந்து ஊக்கப்படுத்தினார்கள்.

 

விழாவில் கேடயங்கள், ரொக்கப் பரிசுகளை வழங்கி திரைப்பட இயக்குநர் நடிகர் பாண்டியராஜன் பேசினார்.

 

அவர் பேசும்போது, "என்னை சிலர் சாதாரண நடிகன் காமெடியன் என்று நினைக்கிறார்கள்.நான் சீரியசான டாக்குமென்ட்ரிகளைக் கூட எடுத்திருக்கிறேன்.ஒரு நாள் அப்படி ஒரு டாக்குமெண்ட்ரி எடுப்பதாக திட்டமிடப்பட்டு புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன் ஒரு புரொடக்ஷன் மேனேஜர் வந்து ஒரு பட வாய்ப்பு தருவதாகக் கூறினார். நான் டாக்குமென்ட்ரி எடுக்கும் திட்டத்தை பெற்றோரிடம் கூறி அந்தப் படத்தில் நடிக்க முடியாது என்று மறுத்து விட்டேன்.டாக்குமென்டரி படத்தை எடுத்து விட்டு வந்து வேண்டுமானால் நடிக்கிறேன் என்று சொன்னேன் .கையில் பணம் கொண்டு வந்திருக்கிறேன்.முதலில் பணத்தை வாங்கிக்கொண்டு நடிப்பதை விட்டு விட்டு  ஏன் உங்களுக்கு இந்த வீண் முயற்சி? என்று கேலியாகப் பேசினார். நான் பிடிவாதமாக முடியாது என்று சொல்லி விட்டேன் .அந்த டாக்குமெண்டரி படத்தை எடுத்தேன். அந்தப் படத்துக்கு அமெரிக்காவில் இரண்டாவது பரிசு கிடைத்தது. சர்வதேச படவிழாவில் எனக்கு அப்படி இரண்டாவது பரிசு கிடைத்தது.

 

அதைக் கேள்விப்பட்டு எல்லா டிவி சேனல்களும் என் வீட்டுக்கு வந்து என்னை பேட்டி எடுத்தார்கள்.மீண்டும் அப்போது அந்த தயாரிப்பு நிர்வாகி வந்தார் . என்ன வீட்டில் கூட்டம் என்று என் உதவியாளரிடம் கேட்டபோது அவர் விஷயத்தை கூறியிக்கிறார்.

 

"அண்ணன்  விடா முயற்சி செய்பவர் .அதற்கான பலன் தான் இது "என்று கூறினார். நாம் வெற்றி பெற்று விட்டால்  வீண் முயற்சி என்று கூறியவர்கள் விடாமுயற்சி என்று கூறுவார்கள். அந்த அளவிற்கு நாம் வெற்றி பெற வேண்டும். 

 

நான் பெரிதாகப் படிக்கவில்லை. சினிமாவுக்கு வந்தபோது எஸ்.எஸ்.எல்.சி வரை மட்டும் தான் படித்திருந்தேன் .ஆனாலும் இயக்குநர் ஆகி விட்டேன் .ஆனால் எனக்கு படிப்பில் ஆர்வம் இருந்தது. அப்பா மேலே படிக்க வைக்க முடியாத அளவுக்கு குடும்ப சூழல் இருந்தது. மேலே என்னை படிக்க வைக்க முடியாத அளவுக்கு குடும்பம்  நிலைமை இருந்தது. எஸ்.எஸ்.எல்.சி முடித்தவுடன் ஏதாவது வேலை பாருப்பா என்றார் அப்பா.என்றாலும் நான்  படிக்க ஆசைப்பட்ட போது இதுக்கு மேலே என்ன படிக்கப் போற என்றார்.இருந்தாலும் நான் விடவில்லை .2004-ல் அஞ்சல் வழியில் நான் எம்.ஏ. முடித்தேன். 2007.ல்  எம்.பில் முடித்தேன். அதற்குப் பிறகு பி.எச்.டி முடித்து விட்டேன் . ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட தலைப்பு என்ன தெரியுமா? சினிமாதான். 'தமிழ் திரைப்பட கலைஞர்களின் சமுதாயப் பங்களிப்பு ' இதுதான் நான் எடுத்துக் கொண்ட தலைப்பு. இப்போது நான் மூன்று பல்கலைக்கழகங்களுக்கு விசிட்டிங் 

ப்ரொஃபஸராகப்  போய்க்கொண்டிருக்கிறேன்.

 

 சினிமா ஒரு நல்ல தொழில். சினிமா ஒரு அற்புதமான தொழில்.  சினிமாவை நம்பியவர்களை அது கைவிடாது. சினிமாவை நம்பினார் கைவிடப்படார் .

మరింత సమాచారం తెలుసుకోండి: