தெலுங்கு இயக்குனர் ராஜமவுலி ,ஐந்து ஆண்டுகளாக செதுக்கிய பிரம்மாண்ட படைப்பு பாஹுபலி. பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா ,சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர் மற்றும் பலர் நடிக்க பெரும் பொருட்செலவில் உருவான இத்திரைப்படம், இரண்டு பாகங்களாக வெளியாகி, தமிழ், தெலுங்கு, ஹிந்தி ,மலையாளம் என பல மொழிகளில் வெளியாகி, சிறப்பான விமர்சனங்களை பெற்றதோடு மட்டுமின்றி ,வசூலிலும் மாபெரும் சாதனை படைத்து ஆயிரத்து ஐநூறு கோடிகளுக்கு மேல் வாரி குவித்தது.



 இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பிரபாஸ் மற்றும் ராணா நாடறியும் நட்சத்திரங்கள் ஆயினர். அடுத்ததாக, நூற்றி ஐம்பது கோடி பட்ஜெட்டில் சாகோ படத்தில் நடித்து வரும் பிரபாஸிற்கு மிக பெரிய அங்கீகாரமாக, சென்ற ஆண்டு, உலக புகழ் பெற்ற மேடம் டூசாட் மெழுகு சிலை காட்சியகத்தில் பிரபாஸின் சிலை வைக்கப்பட்டது. புகழ் பெற்ற அக்காட்சியகத்தில் பல உலக தலைவர்கள், பாலிவுட் நட்சத்திரங்கள், இசை மேதைகள், என பலரின் சிலைகளும் இருக்க, தென்னிந்தியாவிலிருந்து முதன் முதலில் மேடம் டூசாட் அருங்காட்சியகத்தில் தனக்கென ஒரு சிலை வடிவமைக்கப்பெற்றவர் பாஹுபலி பிரபாஸ் தான். 



இந்நிலையில் இன்று புதிய செய்தியாக தமிழ் உள்ளங்களை மகிழ்விக்கும் வண்ணம் ஒரு செய்தி வந்துள்ளது. பாஹுபலி படத்தில் பிரபாஸின் அன்பு மாமாவாக, மகிழ்மதி சாம்ராஜ்யத்தின் விசுவாசமான அடிமையாக, சேனாதிபதி கட்டப்பாவாக நடித்த சத்யராஜிற்கு, மேடம் டூசட் அருங்காட்சியகத்தில் சிலை வரவிருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. பிரபாஸின் சிலை பாங்காக்கில் வைக்கப்பட்டுள்ள போது , கட்டப்பா உருவில் சத்யராஜின் சிலை லண்டனில் வைக்கப்படுமா, அல்லது பாங்காக்கில் வைக்கப்படும் என்பது இன்னும் தெரியாத நிலையில், மேடம் டூசாட் அருங்காட்சியகத்தில் தனக்கென சிலை வடிவமைக்கப்பெறும் முதல் தமிழ் நடிகர் என்ற பெருமை நம் புரட்சி தமிழன் சத்யராஜிற்கு கிடைத்துள்ளது. 



మరింత సమాచారం తెలుసుకోండి: